SpaceX: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

https://www.spacex.com/

தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் தனது முதல் விண்கலத்தை அறிமுகம் செய்துள்ளது.

எலோன் மஸ்க் தலைமையில் இயங்கும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம் பூமியின் தாழ் வட்டப்பாதையில் விண்கலங்களை நிலைநிறுத்தும் நாசாவின் முயற்சியில் கைகோர்த்து இந்த விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்திற்காக நீண்ட காலமாக பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், மனிதரைத் தாங்கி விண்ணுக்குச் செல்லும் முதல் விண்கலத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. க்ரூ ட்ராகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்ப உள்ள 9 விஞ்ஞானிகளின் பெயர்கள் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த விண்கலம் அறிமுகம் செய்யப்பட்டதுடன் இதில் பயணிக்கும் விஞ்ஞானிகள் அணிவதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடைகளும் அறிமுகம் செய்யப்பட்டன. 3D பிரிண்ட் செய்யப்பட்ட ஹெல்மெட், மைக்ரோபோன் மற்றும் ஏர் கூலிங் ஆகியவை இந்த உடையுடன் இணைந்துள்ளன.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த விண்கலம் விண்ணுக்கு ஏவப்படும் என்று கருதப்படுகிறது. அதற்கு ஆயத்தம் செய்யும் விதமாக ஆளில்லா விண்கலம் ஒன்றும் வரும் நவம்பர் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post